நேசம் 10
குழந்தைக்கு ரோகன் என்று பெயர் வைத்து இருந்தான்.ப்ரீத்தாவுக்கு அழைத்த ஜானகியோ, "பையன் பிறந்து இருக்கான்" என்று சொல்ல, அவளோ, "இத எதுக்கு என் கிட்ட சொல்றீங்க அத்தை?" என்று கேட்டாள்.
அதிலேயே அவளது ஆதங்கம் ஜானகிக்கு புரிய, "சரி நான் இனி அத பத்தி பேசல. நீ செக்கப் எல்லாம் போனியா?" என்று கேட்டு விட்டு வைத்து விட்டார்.
பகலில் வள்ளிய தான் குழந்தையை பார்த்துக் கொள்வார், இரவில் அவர் கிளம்பி விடுவார்...
வேலை விட்டு வரும் ஷிவேந்திரனுக்கு குழந்தையை பார்க்க ஆசையாக இருக்கும்... பார்த்து விட்டு தான் தூங்கவே செல்வான்.
இதனிடையே ஒரு நாள் பிரீத்தாவை பார்க்க அவள் வீட்டுக்கே சென்றான்.
"வாங்க" என்று வேல்முருகன் வரவேற்றதுடன் சரி, தேவி காஃபியை கொடுத்து விட்டு சென்றார்.
முதல் போல யாருமே அவனுடன் முகம் கொடுத்து பேசவில்லை.
அவனுக்கு அது எல்லாம் ஒரு பொருட்டே அல்ல, ப்ரீத்தா தன்னுடன் சரியாக பேசினால் போதும் என்கின்ற மனநிலை தான்.
"ரூமுக்குள்ளயா ப்ரீத்தா?" என்று கேட்டுக் கொண்டே, அவனே அறைக்குள் சென்றான்.
அவள் வெளியே கூட வரவில்லை...
ஏதோ ஒரு அழுத்தத்தில் அப்படியே கட்டிலில் அமர்ந்து இருந்தாள்.
முதல் எல்லாம் இந்தளவு இறங்கி அவன் ப்ரீத்தாவிடம் நடப்பது இல்லை...
இப்போதெல்லாம் அவனில் ஒரு மாற்றம்...
அதுவும் கல்யாணத்துக்கு பிறகு இத்தனை வருடங்கள் கழித்து முதல் தடவை பிரிந்து இருக்கின்றாள்.
பெரிய தாக்கமாக இருந்தது அவனுக்கு...
அவளுக்கும் அதே தாக்கம் இருந்தது...
இருவரும் காட்டிக் கொள்ளவில்லை அவ்வளவு தான்.
கட்டிலில் அமர்ந்து இருந்தவள் மெதுவாக அவனை ஏறிட்டு பார்க்க, அவள் அருகே வந்து அமர்ந்து விட்டான்.
"என்ன திடீர்னு?" என்று கேட்டாள்.
"ஏன் டி பார்க்க வர கூடாதா?" என்று கேட்டான்.
"குழந்தை பிறந்து இருக்கே, டைம் கிடைக்காதேன்னு நினச்சேன்" என்றாள்.
அவள் குத்தி பேசுகின்றாள் என்று தெரியும்...
"உன்னை பார்க்காம இருக்கிற அளவுக்கு பிசி இல்ல" என்றான்.
அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள், "இப்படி எல்லாம் என் கிட்ட பேச வருமா என்ன? எல்லாம் அவ கிட்ட தானே பேசுவீங்க" என்றாள் ஆதங்கமாக.
"அதையே திரும்ப திரும்ப பேசாதே, எல்லாரும் நீ ஆயிட முடியாது. புரியுதா?" என்றான்.
"ஆமா எல்லாரும் என்ன போல இளிச்ச வாய் ஆயிட முடியாது, கண் முன்னாடியே இன்னொருத்தி என் புருஷன கொஞ்சுறதயும் புருஷன் இன்னொருத்தியை விழுந்து விழுந்து கவனிக்கிறதையும் பார்த்துட்டு இருக்கிற என்ன சொல்லணும்" என்றாள் ஆதங்கமும் அழுகையுமாக...
"இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்கிற? நான் உன் கிட்ட எல்லாத்துக்குமே விளக்கம் சொல்லிட்டேன்" என்று சொல்ல, அவன் விழிகளை பார்த்தவள், "உங்க விளக்கத்தால என்னை சரி பண்ண முடியாது ஷிவா, குழந்தை பிறந்து இரண்டு மாசம் ஆயிடுச்சு, அவ இன்னுமே வீட்ல தானே இருக்கா, எனக்கு இன்னும் கொஞ்ச நாளுல குழந்தை பிறக்க போகுது... அவளை வாழ்க்கை முழுக்க கூடவே வச்சு இருக்க போறீங்களா?" என்று கேட்க, "பைத்தியம் போல உளறாதே, குழந்தைக்கு பால் கொடுக்கணும்னு" என்று ஆரம்பிக்க, ஒற்றை கையை நீட்டி தடுத்தவள், "இதுக்கு மேல பேசாதீங்க, அப்புறம், நர்சரி அனுப்பனும், ஸ்கூல் அனுப்பணும்னு கூட தான் இருக்க போறா, இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க, நான் என் குழந்தையோட அங்க வரணும்னா அவ அங்க இருக்க கூடாது, இல்ல அவ கூட தான் இருக்க போறீங்கன்னா என்ன விட்ருங்க" என்று சொன்னாள்.
"என்னடி பேசிட்டு இருக்க?" என்று உடைந்து போய் கேட்டான்.
"இப்போ கூட சரின்னு சொல்ல தோணலை ல? நான் பேசுறது தானே தப்பா தெரியுது, ஊர் உலகம் எல்லாம் என்னென்னவோ பேசுது, அத எல்லாம் விட்டுட்டு, உங்க மேல குருட்டு நம்பிக்கை வச்சு பேசிட்டு இருக்கேன், நான் கேக்கிறது ஒரே ஒரு விஷயம் தான், அத உங்களால நிறைவேத்த முடியாம இருக்குல்ல?" என்றாள்.
"பச்" என்றபடி நெற்றியை நீவியவன், "சரி இருக்க மாட்டா, போதுமா?" என்று கேட்டான்.
எதுவும் பேசவில்லை அவள்...
அவள் தலையை வருடினான்.
அவன் கையை தட்டி விட்டாள்.
"ரொம்ப தான் பண்ணுற" என்று சொன்னவன், அவள் கன்னம் பற்றி இழுத்து முத்தமிட்டு விட்டு, "உடம்பை பார்த்துக்கோ" என்று சொல்லி விட்டு எழுந்து செல்ல, கண்களை மூடி கட்டிலில் அமர்ந்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது...
மீண்டும் வேலைக்கு சென்றவன், அன்றும் சாப்பிட்டு முடிய சாதனாவின் அறைக் கதவை தட்டினான்.
அவளும் திறந்தவள், "தட்டணும்னு அவசியம் இல்ல" என்றாள் புன்னகையுடன்.
"உன்னோட பிரைவசி முக்கியம்" என்றான்.
"உங்கள தாண்டி எனக்கு என்ன பிரைவசி?" என்றபடி அவள் உள்ளே செல்ல, அவனுக்கு அந்த வார்த்தைகள் ஒரு மாதிரி ஆகி விட்டன...
அவளை என்ன செய்வது என்றே அவனுக்கு தெரியவில்லை...
தாய் பாசத்தை காட்டி மூன்று மாதங்கள் இருக்க சம்மதம் கேட்டும் விட்டாள்.
அதிக பட்சம் திட்ட முடியும்...
அதற்கெல்லாம் பெண்ணவள் அசந்து விடவே மாட்டாளே...
ஒரு பெருமூச்சுடன், குழந்தையை தூக்கிக் கொண்டே மார்புடன் அணைத்து பிடித்தவன் இதழ்கள் குழந்தையின் முகத்தை பார்த்ததுமே மெலிதாக விரிந்தன.
குழந்தைக்காக நிறையவே ஏங்கி இருக்கின்றான்.
அவன் உயிர்நீரில் உதித்த குழந்தை...
ஒரு ஆழமான பிணைப்பு அவனையும் மீறி குழந்தையுடன்.
"தூங்கிட்டே இருக்கான் ல" என்று கேட்டான்.
அதுவரை இருந்த இறுக்கம் குழந்தையை பார்த்ததும் குறைந்து விட்டதே...
அதனை சாதனாவும் அவதானித்துக் கொண்டே, "ம்ம், குழந்தைன்னா ரொம்ப பிடிக்குமா ஷிவு?" என்று கேட்க, "ரொம்ப ரொம்ப" என்றான்.
"இன்னொரு குழந்தை வேணும்னாலும் சொல்லுங்க" என்றாள்.
அவளை ஏறிட்டு பார்த்தவன், "உன் கிட்ட எதுக்கு சொல்லணும்? தேவைன்னா ப்ரீத்தா கிட்ட கேட்டுக்கிறேன்" என்றான்.
அழுத்தமான கோட்டை இருவருக்கும் இடையே தெளிவாக இப்போது போட்டான்.
சாதனாவின் புருவங்கள் மேலேறி கீழிறங்க, "பொண்டாட்டியை ரொம்ப பிடிக்குமோ?" என்று கேட்க, "ம்ம், ரொம்பவே" என்றவன் குழந்தையை படுக்க வைக்க, "அடுத்த திங்கட்கிழமை வள்ளி அக்கா வர மாட்டேன்னு சொன்னாங்க, அத்தையும் ஊர் திருவிழாவுக்கு போறதா சொன்னாங்க" என்று சொல்ல, "நான் லீவு போட்டு நிக்கிறேன்" என்று சொல்லி விட்டு அவன் அறைக்குள் சென்று விட்டான்.
கொஞ்ச நேரம் கடந்து இருக்கும், அறைக்குள் குழந்தையுடன் வந்த சாதனாவை பார்த்து அதிர்ந்து எழுந்து அமர்ந்து விட்டான் ஷிவேந்திரன்.
நேரத்தை பார்த்தான். நேரம் பதினோரு மணி.
"நீ எங்க இங்க?" என்று கேட்க, "எனக்கு தனியா படுக்க பயமா இருக்கு" என்றாள்.
"அம்மா கூட படு" என்றான்.
அவளோ, "இல்ல அத்தை குறட்டை விடுவாங்க" என்றாள்.
"அதுக்கு" என்றான் அதிர்ச்சி குறையாமல்.
"நான் இங்கேயே தூங்குறேனே. ப்ரீத்தா இல்ல தானே" என்றவளை முறைத்து பார்த்தவன், "என்ன விளையாடுறியா?? இதெல்லாம் சரியாவே இல்லை. இத்தனை நாள் தூங்குன தானே" என்றபடி அவன் எழுந்து கொள்ள , கட்டிலில் குழந்தையுடன் அமர்ந்தவள், "எனக்கு இன்னைக்கு பயமா இருக்கு ஷிவு " என்றாள்.
அவளை வெறித்து பார்த்தவன், "இங்க பாரு சாதனா?? ஒரே ரூம் ல இருந்தா என்ன நினைப்பாங்க?? நமக்குள்ள ஒன்னும் நடக்கலைன்னா கூட வெளிய தப்பா தான் போகும்.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ" என்றான்.
"பயமா இருக்கே நான் என்ன பண்ணட்டும்?" என்று கேட்டவளது கையில் இருந்த குழந்தை அழ ஆரம்பிக்க தயக்கமே இல்லாமல் அவள் பால் கொடுக்க முயல, சட்டென திரும்பி வெளியேறினான்.
"எங்க போறீங்க?" என்று அவள் கேட்டாள்.
"எல்லாம் முடிய கூப்பிடு வரேன்" என்று சொல்லிக் கொண்டே ஹாலில் சென்று சோபாவில் அமர்ந்தவன் கொஞ்ச நேரம் கண்களை மூடி கொண்டான்.
அவனுக்கு சாதனாவை வைத்து கொள்ளவும் முடியவில்லை, துரத்தி விடவும் முடியவில்லை.
அப்படியே அமர்ந்து இருந்தவனின் தோள்களை வருட, சட்டென கண்களை விரித்தவன், "தொட்டு பேசாதேன்னு சொல்லி இருக்கேன் ல." என்று திட்டியபடி எழுந்து கொண்டான்.
"ரொம்ப தான்" என்று அவள் கிண்டலாக சொல்லிக் கொண்டே அவன் அறைக்குள் சென்று குழந்தை அருகே தூங்க அவனோ அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.
"இங்க படுங்க" என்று கட்டிலை காட்டினாள்.
"இல்ல நான் இங்கேயே படுத்துகிறேன்" என்றபடி அவன் படுத்தது என்னவோ சோபாவில் தான்.
"ஷிவு" என்றாள்.
கண்களை திறக்காமலே, "ம்ம்" என்றான்.
"ரெட்டை வால் குருவி, வீரா, சிந்து பைரவி படம் லாம் பார்த்து இருக்கீங்களா?" என்று கேட்க, "நான் உன் குழந்தைக்கு வேணும்னா அப்பாவா இருக்கலாம். ஆனா புருஷன்ன்னா அது ப்ரீத்தாவுக்கு மட்டும் தான்." என்றான்.
"ரொம்ப ஹாண்ட்சம் ஆஹ் இருக்கீங்க" என்றாள் அவள். அவனிடம் ஒரு சலிப்பான பெருமூச்சு மட்டுமே.
"ஆம்பிளைங்களுக்கு ஏதாவது வீக்னஸ் இருக்கு. உங்களுக்கு ஒன்னும் இல்லையா?" என்று கேட்டாள்.
கண்களை திறந்து அவளை வெறித்து பார்த்தவன், "இப்போ என்னடி வேணும்?" என்றான்.
"நீங்க தான்" என்றாள் அவள் கண்களை சிமிட்டி.
"நீ ஆசைப்படுறது இன்னொருத்தங்க பொருள் மேல, கண்டிப்பா கிடைக்காது" என்று கண்களை மூடிக் கொண்டே சொன்னான்.
"கண்டிப்பா எடுத்து காட்டுவேன்... இந்த உலகத்துல யாருமே ராமன் இல்ல... அடுத்த குழந்தை நேச்சுரல் ஆஹ் பெத்து காட்டுறேன்." என்று அவள் விட்ட சவாலில் நெஞ்சில் நீர் வற்றி போனது என்னவோ அவனுக்கு தான்.
எந்தளவு அத்து மீறி பேசிக் கொண்டு இருக்கின்றாள்? நினைக்க நினைக்க கோபமும் வந்தது... அவளை எப்படி கையாள்வது என்று கூட அவனுக்கு தெரியவும் இல்லை.
"தயவு செஞ்சு தூங்குறியா?" என்று எரிச்சலாக சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் நேரத்துக்கே எழுத ஜானகியோ, டீயை போட்டு விட்டு, அதனை கொடுப்பதற்காக ஷிவேந்திரனின் அறையை நோக்கி சென்றார்.
ஏ சி ரூம் ஆயிற்றே, கதவு மூடி தான் இருந்தது...
கதவை திறக்க முயல, அது உட்பக்கத்தால் தாழிடப்பட்டு இருந்தது.
அவன் ஒன்றும் தாழிடவில்லை.
அவன் தூங்கிய பின்னர், தாழிட்டு இருந்தாள் சாதனா...
அவளும் வேண்டும் என்று தாழிடவில்லை, குழந்தைக்கு இரவில் பாம்பெரஸை அறைக்குள் சென்று எடுத்து விட்டு வந்தவள், பழக்க தோஷத்தில் தாழிட்டு இருந்தாள்.
"ஷிவா" என்றபடி ஜானகி கதவை தட்ட, கதவை எழுந்து வந்து திறந்தது என்னவோ சாதனா தான்.
நெஞ்சே அடைத்து விட்டது அவருக்கு...
கையில் இருந்த காஃபி கப் விழ போக, "ஐயோ அத்தை" என்றபடி அவளே காஃபி கப்பை பிடித்து வாங்கிக் கொண்டாள்.
"ஷிவா" என்றார் இதழ்கள் நடுங்க.
"தூங்கிட்டு இருக்கார்" என்று சொல்ல, எட்டி பார்த்தார்.
சோஃபாவில் தான் அவன் தூங்கிக் கொண்டு இருந்தான்.
ஆனாலும் மனதில் தடுமாற்றமும் அழுத்தமும்...
"நீ எங்க இங்க?" என்று சற்று காட்டமாகவே கேட்டார்.
"தனியா படுக்க பயமா இருந்திச்சு, அதான் வந்தேன்" என்றாள் தோள்களை உலுக்கி.
"என் கூட வந்து படுக்க வேண்டியது தானே" என்றார்.
"நீங்க குறட்டை விடுவீங்களே" என்று சொல்ல, அவளை முறைத்துப் பார்த்து விட்டு நகர்ந்தவருக்கு ஷிவேந்திரன் மீது தான் ஆத்திரம் வந்தது...
இன்று சோஃபாவில் படுப்பவன், நாளைக்கு கட்டிலில் படுக்க மாட்டான் என்று என்ன நிச்சயம்?